16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை... மத்திய அரசு அதிரடி..!
கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே வார்த்தை மோதல் அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்டின் அரசுகளும் எதிரெதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தவகையில், மத உணர்வைத் தூண்டும் வகையில், தவறான தகவல்களை பரப்புவதாக மொத்தம் 63 மில்லியன் சந்தாதாரர்களை கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பெரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜியோ நியூஸ், டான், ரஃப்தார், போல் நியூஸ், ஏஆர்ஒய் நியூஸ், சமா டிவி, சுனோ நியூஸ் போன்ற முக்கிய செய்தி நிறுவனங்களின் யூடியூப் சேனல்களும் அடங்கும். கூடுதலாக, முனீப் ஃபரூக், உமர் சீமா, அஸ்மா ஷிராசி மற்றும் இர்ஷாத் பாட்டி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன. உசைர் கிரிக்கெட், தி பாகிஸ்தான் ரெஃபரன்ஸ், ராசி நாமா மற்றும் சமா ஸ்போர்ட்ஸ் ஆகியவை தடைசெய்யப்பட்ட பிற கணக்குகளும் அடங்கும்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்த யூடியூப் சேனல்கள் தவறான கட்டுக்கதைகள் மற்றும் தகவல்களைப் பரப்பி வருகின்றன எனவும், இந்திய ராணுவம் மறறும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையிலும் வகுப்புவாத உணர்வை அதிகரிக்கும் பதிவுகளை இடுவதாகவும் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.