மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு... தமிழகம் இரண்டாவது இடம்!

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு... தமிழகம் இரண்டாவது இடம்!
மனிதக் கழிவு
மனிதக் கழிவுமனிதக் கழிவு

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது. இது மனித சமூகத்தின் மாபெரும் அவமானமாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது தொடர்பாக தொடர்ச்சியான கண்டனங்களும் விமர்சனங்களும் வைக்கப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு நாளும் நாம் கடந்து செல்லும் பல இடங்களில் இது போன்ற நிகழ்வுகள் நம் கண்முன்னே நடந்துகொண்டே தான் இருக்கின்றன.

இதனைத் தடுப்பதற்கான 1994-ம் ஆண்டு `தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம்' உருவாக்கப்பட்டது. இதன்மூலம், மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தைத் தடுக்கவும், கையால் மலம் அள்ளும் இழிவுநிலை தொடர்பான அனைத்துச் சிக்கல்களைக் கண்காணிக்கவும் வழி வகுக்கப்பட்டது. பின்னர், 2013-ல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, மனிதக் கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும், சட்டம் இருந்தாலும், நாடு முழுவதும் இந்த அவலம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை, நகரங்களில் மழைக்காலத்தில் அதிக நீர்த்தேக்கம் ஏற்படும். இதனைத் தடுக்க மனிதர்களை வைத்து தங்கள் வீட்டு செப்டிக் டேங்குகளை தூர்வாரச் செய்யும் அவலமானது அதிகளவில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

இது மட்டுமின்றி அதிகம் பாதிக்கப்படும் மக்கள் ரயில் போக்குவரத்திலும் உள்ளனர். உலகளவில் உள்ள ரயில் போக்குவரத்திலேயே இந்தியா மிகவும் பெரியது. குறிப்பாக, 13 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு இந்திய ரயில்வே இயங்கி வருகிறது. இதே துறையில் தான் அதிகமாக மலம் அள்ளும் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது எனவும் தேசியத் துப்புரவுப் பணியாளர் ஆணையம் சொல்கிறது.

இந்த அவல நிலைக்கு முடிவுகட்ட எண்ணி பல்வேறு தன்னார்வ இயக்கங்கள், தலைவர்கள் எனப் பலரும் தொடர்ந்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். எனினும் இந்த அவலம் முடிவுக்கு வந்ததாக இல்லை. இந்த அவல நிலையில் சிக்கிக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பலர் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை 5 ஆண்டுகளில் மட்டும் இந்திய அளவில் சுமார் 330 பேர் இறந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 43 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இறப்புகளுக்கு முக்கியக் காரணம் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்காமல் இருப்பதே என்பது பலரின் கருத்தாகவும் உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. இந்திய அளவில் உயிரிழப்புகள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மனிதக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றமும் தேசிய தூய்மைப் பணி தொழிலாளர்கள் ஆணையமும் பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளன. ஆனால், ஏட்டில் உள்ள வழிமுறைகள் பயன்பாட்டிற்கு வந்தால்தான் இந்த மானுட அவலம் மறையும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com