ராஜஸ்தான் மாநிலத்துக்கு மத்திய அரசின் பிஎம் கேர் நிதியிலிருந்து வழங்கப்பட்ட 592 வென்டிலேட்டர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
பாரத் எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) தயாரித்த 571 வென்டிலேட்டர் இயங்கவில்லை என்று மாநில அரசின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதில் மே 16 வரை 180 வென்டிலேட்டர் மட்டுமே சரிசெய்யப்பட்டுள்ளன. பி.எம் கேர்ஸ் மூலம் இதுவரை மாநிலத்திற்கு 1,900 வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டன. அவற்றில் 1,500 பி.இ.எல் நிறுவனமும் 400 அக்வா ஹெல்த்கேர் நிறுவனங்களும் தயாரித்தவை.
ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் ரகு ஷர்மா, “மாநிலத்தில் இப்போது மொத்தம் 2,523 வென்டிலேட்டர்கள் உள்ளன. இதில் பிஇஎல் மற்றும் அக்வா வழங்கிய 1,900 அடங்கும். ராஜஸ்தானில் மொத்தம் 2,530 ஐ.சி.யூ படுக்கைகள் வென்டிலேட்டர்களுடன் உள்ளன. அவற்றில் 2,314 படுக்கைகள் நிரம்பியுள்ளன, சனிக்கிழமை நிலவரப்படி 216 படுக்கைகள் காலியாக உள்ளன” எனத் தெரிவித்தார்.
பல்வேறு பிரச்னைகள் காரணமாக மே 13 வரை 592 பிஎம் கேர்ஸ் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்த முடியவில்லை. 366 வென்டிலேட்டர் இயந்திரங்கள் அழுத்தம் குறைவு, பொத்தான் செயலிழப்பு மற்றும் சென்சார் செயலிழப்பு போன்ற சிக்கலால் இயங்கவில்லை. மீதமுள்ள இயந்திரங்கள் பொருத்தப்படாமல் உள்ளன, பல வென்டிலேட்டர்களில் பாகங்களை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
"வென்டிலேட்டர் கருவியின் பழுதை நீக்க 11 பொறியாளர்களை நியமித்ததாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த பொறியியலாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் கூட எங்களிடம் இல்லை. மருத்துவக் கல்லூரிகள் மூலம், 5 பொறியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள், அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். எனவே எங்களுக்கு மூத்த, அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் தேவை, ”என்று ரகு சர்மா தெரிவித்தார்
பிஎம் கேர் வென்டிலேட்டர்களில் குறைந்தது 727, பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு சிக்கல்கள்களுடனேயே பயன்படுத்தப்படுகின்றன. ராஜஸ்தானில் தினசரி 18,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.