மும்பை துறைமுகத்தில் ரூ.1700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்! அதிர்ச்சி பின்னணி!

மும்பை துறைமுகத்தில் ரூ.1700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்! அதிர்ச்சி பின்னணி!
மும்பை துறைமுகத்தில் ரூ.1700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்! அதிர்ச்சி பின்னணி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நவசேவா துறைமுகத்தில் 22 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் பிடிபட்டுள்ள பெரிய அளவிலான போதைப்பொருட்கள் குறித்த பின்னணியுடன் இந்தத் தொகுப்பு பற்றிக் காணலாம்.

அண்மை காலங்களாக வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் இந்தியாவிற்கு அதிக அளவு கடத்தி வரப்படுகின்றன. குறிப்பாக கடல் வழியாக போதைப்பொருட்கள், இந்தியாவின் குஜராத் உள்ளிட்ட முக்கிய மாநில துறைமுகங்களுக்கு கடத்தி வரப்பட்டு இந்தியா முழுவதும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் நவசேவா துறைமுகம் உள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் போதைப்பொருட்கள் கன்டெய்னரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் போலீசார் கப்பலில் இருந்து வந்து இறங்கிய கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஒரு கன்டெய்னரில் 22,000 (22 டன்) கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.1,725 கோடி என கூறப்படுகிறது. கண்டெய்னரில் கடத்தப்படவிருந்த ஹெராயினை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹெராயின் கடத்தலைக் கண்டுபிடிக்காமல் இருக்க அதிமதுர குச்சிகளில் ஹெராயின் பூசப்பட்டு கண்டெய்னரில் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கண்டெய்னர் பெட்டகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவலர்கள் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக இந்தியாவில் இதுபோன்ற போதைப்பொருள் கடத்தல் சம்பவம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 14-ந் தேதி குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்துக்கு அருகே இணைந்து தேடுதல் வேட்டை நடத்தி வந்தபோது ஜக்காவ் கடலோர பகுதியில் இருந்து 33 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் பாகிஸ்தானின் மீன்பிடி படகு ஒன்று இந்திய நீர்வழி பகுதியில் 6 கிலோ மீட்டர் வரை நுழைந்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்திய கடலோர காவல் படையினர் இரண்டு விரைவு படகில் துரத்தி சென்று பாகிஸ்தான் படகை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் படகில் சோதனை செய்தனர். கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு பிரிவினரும் படகில் நடத்திய சோதனையில் மொத்தமாக 40 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும். இந்த போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு பாகிஸ்தானின் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது. போதை பொருள் கடத்தி வந்தது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு பிறகு இன்று மகாராஷ்டிராவில் அதிக மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருந்தாலும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குறைந்தபாடில்லை. அரசு போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளது.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் பிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் விவரங்கள்:-

1) இந்தாண்டு தொடக்கத்தில் குஜராத் கடற்கரை அருகே ஒரு படகில் இருந்து சுமார் 2000 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான 800 கிலோ போதை பொருட்களை கடற்படையுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்தனர்.

2) இதுவரை குஜராத் மாநிலத்தில் கைப்பற்றப்பட்டதில் இது மிகப்பெரிய பறிமுதலாக பார்க்கப்பட்டது.

3) இந்த ஆண்டு மே மாதம் ரூ.500 கோடி போதைப்பொருட்களும், ஜூலை மாதம் ரூ.375 கோடி போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

4) குஜராத்தில் கடந்த ஆகஸ்ட் 16-ந் தேதி 513 கிலோ எம்.டி.போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,026 கோடி ஆகும். மேலும் போலீசார் போதை பொருள் ஆலை நடத்தி வந்த கிரிராஜ் தீக்சித்தையும் கைது செய்தனர்.

5) செப்டம்பர் 14-ந் தேதி இந்திய கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com