மோடி அமைச்சரவையில் 51 கோடீஸ்வரர்கள், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள்
பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களில் 51 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 22 பேர் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வேட்பு மனுக்களை கொண்டு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மொத்தம் 56 அமைச்சர்களின் வேட்புமனுக்களை ஆராய்ந்ததில், 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 16 பேர் மீது கொலை முயற்சி, சமூக நல்லிணக்கத்துக்கு தீங்கு விளைவித்தல், தேர்தல் விதிமீறல் போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. கடந்த அமைச்சரவையுடன் ஒப்பிடுகையில் இம்முறை குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
( பிரதாப் சந்திர சாரங்கி)
அமைச்சரவையில் 51 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் அமித் ஷா, பியுஷ் கோயல், ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோருக்கு 40 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு கீழ் சொத்துள்ள அமைச்சர்கள் 5 பேர் மட்டுமே என்றும் ஒடிஷாவில் இருந்து தேர்வான பிரதாப் சந்திர சாரங்கியின் சொத்து மதிப்பு 13 லட்சம் ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது