தனது விரோதி விவசாயம் செய்வதை தடுக்க, தனது தாயையே ஒருவர் டிராக்டரின் முன் வீசிய அதிர்ச்சி சம்பவம் மகராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது.
மகராஷ்டிராவின் வாஸிம் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலம் தொடர்பாக இரண்டு நபர்களிடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கில் ஒரு நபருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டதையடுத்து, அந்த நபர் டிராக்டர் மூலம் அந்த நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் வழக்கில் தோல்வியடைந்த நபர் தனது ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது டிராக்டர் மூலம் விவசாயம் செய்யப்படுவதை தடுக்க தனது தாயையே டிராக்டரின் முன் அவர் தள்ளிவிட்டுள்ளார். இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாயை டிராக்டர் முன் தள்ளிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.