மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு மாநில ஆளுநரிடம் உரிமை கோரப்பட்டுள்ளது.
மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும், பாஜக இரண்டு இடங்களிலும், சுயேட்சை 3 இடங்களிலும், மற்றவை 14 இடங்களிலும் வெற்றி கண்டன. பெரும்பான்மைக்கு மொத்தம் 31 இடங்கள் தேவையான நிலையில் அங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் தொங்கு சட்டப்பேரவை நிலவுகிறது.
இந்நிலையில் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு மாநில ஆளுநரிடம் உரிமை கோரப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத், அகமது படேல் மற்றும் சி.பி ஜோஷி ஆகியோர் நேற்றிரவு ஆளுநர் கங்கா பிரசாத்தை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்கள். தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்ற வழக்கத்தின்படி, காங்கிரசுக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை கேட்டுக் கொண்டதாக, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் கமல்நாத் கூறியுள்ளார்.
மேகாலாயில் ஆட்சியைத் தக்கவைக்க மாநிலக் கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் வின்சென்ட் ஹெச் பலா தெரிவித்துள்ளார். மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்கும் என நம்புவதாகவும் வின்சென்ட் கூறியிருக்கிறார். இதனிடையே, 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சியும், மாநிலக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.