பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின் திட்டம் கேரளாவில் அறிமுகம்
கேரளாவில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'ஷி பேட்' என்ற இத்திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.அதன் முதல் கட்டமாக 300 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் அடுத்த ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவிகள் மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் இந்தத் திட்டம் மூலம் பயன்பெறுவர். திட்டத்திற்காக கேரள மாநில மகளிர் மேம்பாட்டு கழகம் ரூபாய் 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒவ்வொரு பெண்ணின் உரிமை எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இலவச சானிடரி நாப்கின் மட்டுமே வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார். பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரிப்பதற்கான இயந்திரங்களும் பள்ளிகளில் நிறுவப்படும் என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.