தொடரும் சோகம்.. பைக் மீது மோதிவிட்டு வேகமாக சென்ற கார் - ஆராய்ச்சி மாணவர் பலி

தொடரும் சோகம்.. பைக் மீது மோதிவிட்டு வேகமாக சென்ற கார் - ஆராய்ச்சி மாணவர் பலி
தொடரும் சோகம்.. பைக் மீது மோதிவிட்டு வேகமாக சென்ற கார் - ஆராய்ச்சி மாணவர் பலி

தலைநகர் டெல்லியில் வேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், ஐஐடி டெல்லியில் படித்துவந்த ஆராய்ச்சி மாணவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவர் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

டெல்லியில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களாக பயின்று வந்தவர்கள் 30 வயதான அஷ்ரஃப் நவாஸ் கான் மற்றும் 29 வயதான அங்கூர் சுக்லா. இவர்கள் இருவரும் கடந்த செவ்வாய்கிழமை இரவு, ஐஐடி டெல்லி நிறுவனத்துக்கு எதிரே இருந்த உணவகம் ஒன்றில் உணவருந்தச் சென்றுள்ளனர். அங்கு உணவருந்திவிட்டு மீண்டும் திரும்ப நினைத்து, ஐஐடி டெல்லி நம்பர் 1 கேட் அருகே சுமார் 11.15 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டது.

இதில் இரு மாணவர்களும் படுகாயங்கள் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சஃப்தர்ஜங்க் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அஷ்ரஃப் நவாஸ் கான் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாணவர் சுக்லா, மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இரு மாணவர்கள் மீதும் மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற கார் ஓட்டுநர், சேதமடைந்த காரை மட்டும் தன்னந்தனியாக விபத்து நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். கார் ஓட்டுநரின் அடையாளம் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் சமீபத்தில் பெண் ஒருவர் மீது மோதிவிட்டு பல கிலோ மீட்டர் தூரம் காரில் இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் ஸ்விக்கி டெலிவரி செய்தவந்த இளைஞர், கடந்த சனிக்கிழமை சண்டிகரில் தெரு நாய்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்த இளம் பெண், நேற்று பெங்களூருவில் தவறான பாதையில் வந்த இளைஞரை தட்டிக்கேட்ட முதியவரை 1 கி.மீ. தூரம் இழுத்துச் சென்றது என விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் வழக்குகள் அதிகரித்து வருவது பலரையும் வேதனைப்படுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com