தஸ்லிமா இருக்கும்போது, ரோஹிங்யா இருக்கக் கூடாதா? ஓவைசி கேள்வி
தஸ்லிமா நஸ்ரின் பிரதமர் மோடியின் சகோதரியாக இருக்கும்போது ரோஹிங்யா முஸ்லீம்கள் அவரது சகோதரர்களாக இருக்கக் கூடாதா? என்று ஐதராபாத் எம்பி, அசாடுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், ‘பிரதமர் மோடி, அவர்களை முஸ்லீம்களாக பார்க்க வேண்டாம். அகதிகளாக கருதி, மற்ற அகதிகளைப் போல இந்தியாவில் தங்க அனுமதி வேண்டும். இங்கு பங்களாதேஷின் தஸ்லிமா நஸ்ரின் வசிக்கும் போது, ரோஹிங்யா முஸ்லீம்கள் ஏன் இருக்கக் கூடாது. தஸ்லிமா பிரதமரின் சகோதரியாக இருக்க முடியும்போது, ரோஹிங்கியா முஸ்லீம்கள் அவரது சகோதரர்களாக இருக்க முடியாதா? அவர்களை திருப்பி அனுப்புவது தவறானது.
எந்த சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு அவர்களை திருப்பி அனுப்புகிறது? இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை ஏன் திரும்ப அனுப்பவில்லை? மத்திய அரசு ரோஹிங்கியா முஸ்லீம்களை அகதிகளாக கருதி தங்க அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கும் மரியாதையான ஒரு வாழ்க்கை அமைய வாய்ப்பை கொடுக்க வேண்டும்’ என்றார்.