சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் எஃப்-16 விமானம் - ரேடார் ஆதாரத்தை வெளியிட்டது இந்தியா
இந்தியா விமானப் படை பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதரத்தை வெளியிட்டுள்ளது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறித்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. பால்கோட் பகுதியில் அதிகாலையில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடந்த அன்றே இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் ‘எஃப் 16’ ரக போர்விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப் படை ‘எஃப் 16’ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய விமானப் படை பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானம் பயன்படுத்தியதற்கும் அதனை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கும் ஆதாரம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஏர் வைஸ் மார்சல் ஆர்.ஜி.கே. கபூர், “பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானம் பயன்படுத்தியதற்கான ஆதாரமும் அதனை இந்தியா சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரமும் எங்களிடம் உள்ளது. அத்துடன் இதற்கான ரேடார் ஆதாரத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக பாகிஸ்தானின் அனைத்து எஃப்-16 ரக விமானங்களும் அதன் விமானப் படை வசம் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியா பொய் சொல்லிவருவதாக தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில் இந்திய விமானப் படை தாக்குதலுக்கான ரேடார் ஆதாரத்தை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.