பாகிஸ்தான் வசம் இருந்தபோது மனரீதியாக துன்புறுத்தப்பட்டேன் என அபிநந்தன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து நேற்று தாயகம் திரும்பிய அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராணுவ தளபதி பி.எஸ் தனோவாவிடம் பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பது குறித்து அபிநந்தன் விளக்கம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, டெல்லியில் விமானப்படை வீரர் அபிநந்தனை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். அப்போது அபிந்தனிடம் உடல் நலம் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற விவகாரங்கள் குறித்தும் அபிநந்தன் எடுத்துரைத்தாக தகவல் வெளியாகியது.
இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடத்திற்கு மேலாக நடைப்பெற்றது என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இச்சந்திப்பின்போது பாதுகாப்புத்துறைக்கான உயர்மட்ட அதிகாரிகள், மற்றும் விமானப்படையை சேர்ந்த உயரதிகாரிகள் இருந்ததாக தெரிகிறது. இதில் குறிப்பாக பாகிஸ்தானில் அபிநந்தன் எத்தகைய இன்னல்கள், மற்றும் சவால்களை சந்திக்க முடிந்தது என்பது குறித்து பேச்சுவார்த்தையில் பேசப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், தன்னை உடல் ரீதியாக பாகிஸ்தான் துன்புறுத்தவில்லை எனவும் ஆனால் மனரீதியாக துன்புறுத்தினர் எனவும் விமானி அபிநந்தன் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 50 மணி நேரங்களுக்கு மேல் அபிநந்தன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.