புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றால் தனக்கு வழங்கப்பட்ட ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நேற்று நடத்திய 5-ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால்தான் வீட்டிற்கு திரும்புவோம் என உறுதிபட கூறி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 11-வது நாளாக தொடர்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய விஜேந்தர் சிங் போராட்டக்களத்துக்கு சென்று பேசினார். அப்போது வேளான் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை என்றால் தனக்கு வழங்கப்பட்ட ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.