கொதிக்கும் சாம்பார் கொட்டி 5 வயது சிறுவன் உயிரிழப்பு!!
(கோப்பு புகைப்படம்)
ஹைதராபாத்தில் அடுப்பில் கொதித்துக் கொண்டு இருந்த சாம்பார் பாத்திரத்தை சிறுவன் இழுத்த நிலையில் கொதிக்கும் சாம்பார் கொட்டியே அச்சிறுவன் உயிரிழந்துள்ளான்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹையாத்நகரில் புதுமனை புகுவிழாவிற்கு வெங்குலு என்பவர் தன் குடும்பத்துடன் சென்று வந்துள்ளார். மீண்டும் வீடு திரும்பிய அவர்களின் வீட்டிற்கு சில விருந்தினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்காக வெங்குலுவும் அவரது மனைவியும் அவசரமாக சமைத்துள்ளனர்.
அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த அவர்களது ஐந்து வயது மகன், அடுப்பில் கொதித்திக் கொண்டு இருந்த சாம்பாரை இழுத்துள்ளான். அந்த சாம்பார் முழுவதும் அவன் மீது கொட்டியுள்ளது. உடனடியாக சிறுவனைத் தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை பாலாபூரில் சமையல் செய்துகொண்டிருக்கும்போது, கொதிக்கும் எண்ணெய் ஊற்றியதில் படுகாயம் அடைந்த இளம்பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.