ஆர்யன்கானுக்காக அனைத்து மாஃபியா பப்புவும் வருகிறார்கள்: ஹிரித்திக் பதிவும், கங்கனா பதிலும்
’அனைத்து மாஃபியா பப்புவும் ஆர்யன் கானுக்கு ஆதரவாக வருகிறார்கள். தவறு செய்திருக்கிறார். அதை மகிமைப்படுத்தக்கூடாது’ என கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தவே, ஆர்யன் கைது செய்யபட்ட சில மணி நேரங்களிலேயே ஷாருக்கானை, சல்மான்கான் மற்றும் ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசேன் கானும் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் ஆர்யன் கானுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவரது பதிவில், ''குழந்தையாகவும், பெரியவனாகவும் உன்னை எனக்கு தெரியும். உன் வாழ்வில் ஏற்படும் அனுபவங்களெல்லாம் உனக்கானது. அது உன்னுடைய கிஃப்ட். என்னை நம்பு. இந்த புள்ளிகளையெல்லாம் சேர்த்து பார்க்கும்போது அது உனக்கு ஒரு புதிய அர்த்தத்தை கொடுக்கும்.
குழப்பங்களுக்கு இடையில் நீங்கள் உங்களை தக்கவைத்துக்கொள்வதற்கான அழுத்தத்தை உணரும்போது நீ தேர்ந்தெடுக்கப்படுகிறாய். நீ அதை உணர வேண்டும். கோபம், குழப்பம், உதவியற்ற தன்மை இவை யாவும் உனக்குள் இருக்கும் ஹீரோவை எரித்துவிடும். இருளுக்குள் இருக்கும்போது ஒளியை நம்பு. அது உள்ளுக்குள்ளே இருக்கிறது'' என்று பதிவிட்டுள்ளார். இறுதியாக, 'லவ் யூ மேன்' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனா ராணவத், '''இப்போது அனைத்து மாஃபியா பப்புவும் ஆர்யன் கானுக்கு ஆதரவாக வருகிறார்கள். தவறு செய்திருக்கிறார். அதை மகிமைப்படுத்தக்கூடாது. இந்த சம்பவம் ஆர்யனுக்கு புதிய கோணத்தை காட்டியிருக்கும் என நம்புகிறேன். ஒரு செயலினால் ஏற்படும் விளைவுகளை அவருக்கு உணர வைத்திருக்கும். இது அவரை சிறந்தவனாகவும் பெரியவனாகவும் மாற்றும். ஒருவர் பாதிக்கப்படும்போது அவர்களைப் பற்றி கிசுகிசுக்காமல் இருப்பது நல்லதுதான், ஆனால் அவர்கள் தவறு செய்யவில்லை என்று உணர வைப்பது குற்றமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.