இந்தியா தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தார்கள் ? நிர்மலா சீதாராமன் பதில்

இந்தியா தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தார்கள் ? நிர்மலா சீதாராமன் பதில்
இந்தியா தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் உயிரிழந்தார்கள் ? நிர்மலா சீதாராமன் பதில்

விமானப் படை தாக்குதலில் பயங்ரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதில் வெளியுறவு செயலரின் அறிக்கையே அரசின் நிலைப்பாடு என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை  பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. ஆனால் இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விவரம் குறித்து வெளியுறவு செயலர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேமசயம் விமானப் படையினரின் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே விமானப் படையினரின் தாக்குதலில் 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. இதனையடுத்து 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். அதேசமயம், விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன், விமானப் படை தாக்குதலில் பயங்ரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதில் வெளியுறவு செயலரின் அறிக்கையே அரசின் நிலைப்பாடு என தெரிவித்தார். விமானப் படை தாக்குதலுக்கு ஆதாரமாக சாட்டிலைட் புகைப்படம் உள்ளதாக என்பதை தெரிவிக்க இயலாது என கூறிய அவர், பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காததால் தான் இந்தியா தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார். அத்துடன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com