வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்ததால் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புனே அருகிலுள்ள ஹோப்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீதேந்திர காம்ப்ளே (37). இவரது பக்கத்து வீட்டில் இருப்பவர் சுபாஷ் தாம்பளே (39). இருவருக்கும் வாய்த்தகராறு. அது முற்றிப்போக, டென்ஷன் ஆன தாம்பளே, காம்ப்ளேவை கத்தியால் குத்திவிட்டு எஸ்கேப் ஆனார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காம்ப்ளேவை மீட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது. இருந்தும் இறந்து போனார் காம்ப்ளே. அவர் இறப்புக்கான காரணத்தை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை.
பின்னர் காம்ப்ளேவின் உடல், பிரேத பரிசோதனைக்குச் சென்றது. அப்போது உடல்கூறு ஆய்வு செய்த டாக்டர்களுக்கு திடீர் அதிர்ச்சி. காம்ப்ளேவின் அடிவயிற்றில் ஆறு இன்ச் அளவுக்கு துணி ஒன்று சுருண்டிருந்தது. இது, ஆபரேஷனின் போது ரத்தத்தை உறிஞ்சு எடுக்கப் பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் மாப் எனப்படும் சுத்தமான துணி. ஒவ்வொரு முறையும் ஆபரேஷன் நடக்கும் இடத்தில் ரத்தத்தைத் துடைத்துவிட்டு அதை வெளியே வைக்க வேண்டும். ஆனால், வெளியே வைக்காமல் உடலுக்குள் வைத்து தைத்ததால்தான் காம்ப்ளே இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கத்திக் குத்து காயத்தால்தான் அவர் இறந்தார் என்று டாக்டர்கள் கூறிவருகின்றனர். கார்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.