புகழஞ்சலி: டி.என். ஜா... வலதுசாரிகளின் மிரட்டல்களை எதிர்கொண்ட 'மக்களின் வரலாற்றாசிரியர்!'

புகழஞ்சலி: டி.என். ஜா... வலதுசாரிகளின் மிரட்டல்களை எதிர்கொண்ட 'மக்களின் வரலாற்றாசிரியர்!'
புகழஞ்சலி: டி.என். ஜா... வலதுசாரிகளின் மிரட்டல்களை எதிர்கொண்ட 'மக்களின் வரலாற்றாசிரியர்!'

ஜா தனது 'புனித பசுவின் கட்டுக்கதை' புத்தகத்தில் பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழக்கங்களை மேற்கோள்காட்டி இருந்தார். இதற்காக மிரட்டல்களை ஜா எதிர்கொண்டார். அப்போது மட்டுமல்ல, தனது வாழ்க்கை முழுவதும் வலதுசாரிகளிடமிருந்து பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வரலாற்றாசிரியர் டி.என் ஜா, இந்திய வரலாற்றின் மதசார்பற்ற வாசிப்புக்காக அறியப்பட்டவர். அவர் வியாழக்கிழமை தனது 81 வயதில் காலமானார்.

'மக்களின் வரலாற்றாசிரியர்' எனப் புகழப்பெற்றவர் ஜா. பீகாரில் பிறந்த டி.என். ஜா, உயர்கல்வியை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் படித்து முடித்துவிட்டு, டெல்லி பல்கலை.யில் வரலாற்றுப் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார். தனது கல்வி வாழ்க்கை முழுவதும், ஜா வரலாற்று நிகழ்வுகளிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு வகுப்புவாத அல்லது பெரும்பான்மை பிரசாரத்தையும் கடுமையாக எதிர்த்துப் போராடியுள்ளார். மேலும், அவரது வாழ்நாளில் பல கட்டுக்கதைகளை உடைத்துள்ளார்.

'ஆரம்பகால இந்திய பொருளாதார வரலாற்றில் ஆய்வுகள்', 'ஆரம்பகால இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் சமூகம்: சிக்கல்கள் மற்றும் முன்னுதாரணங்கள்', 'இந்தியாவில் சமூகம் மற்றும் கருத்தியல்', 'பண்டைய இந்தியா: வரலாற்று வெளிக்கோடு', 'புனிதப் பசு: இந்திய உணவில் மாட்டிறைச்சி மரபுகள்', 'ஆரம்பகால இந்தியா: ஒரு சுருக்கமான வரலாறு, புனித பசுவின் கட்டுக்கதை 'மற்றும்' மறு சிந்தனை இந்து அடையாளம்' ஆகியவை ஜாவின் படைப்புகள்.

அயோத்தி ராமர் கோயில், பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் இருந்தது என்பதற்கு கணிசமான ஆதாரங்கள் இல்லை என்பதே ஜாவின் மிகவும் பிரபலமானதும், விவாதத்துக்குரியதுமான கூற்றுகளில் ஒன்றாகும்.

மேலும், 'ராமஜென்மபூமி - பாபர் மசூதி: தேசத்திற்கான ஒரு வரலாற்றாளனின் அறிக்கை' என்ற ஆய்வறிக்கையை பிரபல வரலாற்றாய்வாளர்களான சூரஜ் பன், அதர் அலி, ஆர்.எஸ். சர்மா ஆகியோருடன் இணைந்து வெளியிட்டார் ஜா. சங்க பரிவார் அமைப்புகளின் கோட்பாடுகள், அந்த அமைப்பின் அரசியல் நலன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்பது ஜாவின் வாதம். ஜா தனது 'புனித பசுவின் கட்டுக்கதை' புத்தகத்தில் பண்டைய இந்தியாவில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழக்கங்களை மேற்கோள்காட்டி இருந்தார். இதற்காக மிரட்டல்களை ஜா எதிர்கொண்டார்.

அப்போது மட்டுமல்ல, தனது வாழ்க்கை முழுவதும் வலதுசாரிகளிடமிருந்து பலமுறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். ஒருமுறை வாஜ்பாய் அரசாங்கத்தின் அமைச்சர் அருண் ஷோரி, "ஜா வரலாற்றை சிதைக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதாரங்களைத் தூக்கி, உண்மைகளை மறைக்கிறார்" என்று கூறினார்.

பிரபல வரலாற்றாசிரியர் ஆர்.எஸ். சர்மாவிடம் பயிற்சி பெற்ற ஜா, இந்தியாவின் பண்டைய வரலாறு ஆய்வை மன்னர்கள் மற்றும் போர்களின் வரலாறாக மட்டும் ஆய்வு செய்யாமல் மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வியலின் வரலாறு குறித்தும் ஆய்வு செய்திருக்கிறார். இதனால், இன்றளவுக்கும் இவரின் ஆய்வு நூல்கள் பண்டைய இந்தியா குறித்த ஆய்வு நூல்களில் தவிர்க்க முடியாதவையாகவே இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வாதத்தால் செவித்திறனை பெருமளவில் இழந்திருந்த ஜா வியாழக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com