”பாபர் மசூதிபோல் ஒளரங்கசீப் கல்லறையையும் அகற்றணும்” மகாராஷ்டிரா அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை!
மகாராஷ்டிர மாநிலத்தில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய பேச்சுகள் விஸ்வரூபமெடுத்து வருகின்றன. சமீபத்தில், ஔரங்கசீப்பைப் புகழ்ந்து பேசியதற்காக மகாராஷ்டிரா சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தும் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற தானும் விரும்புவதாகவும், அதில் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கல்லறையை அகற்ற வலியுறுத்தியும், அகற்றாவிட்டால் கரசேவை மூலம் அகற்றுவோம் என்றும் தெரிவித்து மாநில அரசிடம் மனு அளிக்க பஜ்ரங் தள், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பாபர் மசூதிக்கு (1992ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்தது குறிப்பிடத்தக்கது) ஏற்பட்ட நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும் என்று இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் உள்ள ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்து அமைப்புகளைச் சேர்ந்த விஹெச்பி பிராந்தியத் தலைவர் கிஷோர் சவான், பஜ்ரங் தள பிராந்திய ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் மற்றும் சந்தேஷ் பெக்டே ஆகியோர் இதுகுறித்து எச்சரித்துள்ளனர்.
ஔரங்கசீப் கல்லறை இடிப்பது தொடர்பாக மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரி. அவரின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?” என்று பேசியுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார், “மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு இந்து அமைப்புகள் கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.
மறுபுறம், NCP (SP) தலைவர் ஜிதேந்திர அவ்ஹாத் இந்த நடவடிக்கையை விமர்சித்தார். “ராவணனைப் பற்றி குறிப்பிடாமல் ராமாயணத்தை விவரிக்க முடியுமா அல்லது அப்சல் கான் இல்லாமல் பிரதாப்கட் போரை விவரிக்க முடியுமா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, முகாலயப் பேரரசர் ஔரங்கசீப் மராத்திய அரசரான சம்பாஜி மகாராஜாவை கொடுமைப்படுத்திக் கொன்றதாக சமீபத்தில் வெளியான ’சாவா’ திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அந்தப் படம் குறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ. அபு அசீம் ஆஸ்மி, “17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசரை ஒரு கொடூரமான, கொடுங்கோல் அல்லது சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராக தான் பார்க்கவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் ஔரங்கசீப்பின் சிதைந்த பிம்பம் உருவாக்கப்படுகிறது” எனக் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, சம்பாஜி மகாராஜா மற்றும் ஔரங்கசீப் பற்றிய விவாதங்கள் மகாராஷ்டிரத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளன.