கடமையை செய்த அதிகாரி சுட்டுக்கொலை: இனி உத்தரவுகளையே பிறப்பிக்கப்போவதில்லை நீதிமன்றம் காட்டம்
இமாச்சல் பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரால் மாநகராட்சி அதிகாரி சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல் பிரதேசம் சோலன் பகுதியில் ஹோட்டல்கள் பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் சோலன் மாவட்டத்தில் கசெளலி (Kasauli) மற்றும் தாராம்பூர் (Dharampur) பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் இயங்கும் 13 ஹோட்டல்களை இடித்துத்தள்ள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவின் படி மாநகராட்சி ஊழியர்கள் கட்டிடங்களை இடிக்கும் பணிகளை தொடங்கினர். மாநகராட்சி அதிகாரி ஷைல்பாலா மேற்பார்வையில் இந்தப் பணிகள் நடைப்பெற்றது.
நாராயணி என்ற பெயரில் இயங்கி வந்த கெஸ்ட் ஹவுஸ் சட்டத்திற்கு புறம்பாக இயங்கி வந்ததாக தெரியவந்துள்ளது. அதனை இடிக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர். அப்போது அந்த கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் மாநகராட்சி ஊழியர்களை மிரட்டியுள்ளார். தொடர்ந்து ஊழியர்கள் இடிக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் விஜய் குமார் (51) மாநகராட்சி அதிகாரி பாலாவை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த பாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இடிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த ஊழியர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் குலாப் சிங் என்பவர் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
மற்ற இடங்களில் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் சுமூகமாக நடந்துள்ளது.பிற பகுதிகளில் கட்டிடங்களை இடிக்க அதன் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளித்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாராம்பூர் பகுதியில் மட்டுமே அசம்பாவிதம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ஷைல்பாலா குழுவினர் விஜய் குமாருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுசை இடிக்க சென்றுள்ளார். அப்போது அதிகாரிகளுடன் விஜயகுமார் மற்றும் அவரது தாய் நாராயணி தேவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இடிக்கும் பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். யாரும் எதிர்பாராத வேளையில் விஜய் குமார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.சத்தம் கேட்டு காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளார். அதற்குள் விஜய் குமார் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். மாநகராட்சி அதிகாரி பாலா குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குலாப் சிங் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய விஜயகுமார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள விஜய்குமார் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.1லட்சம் வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவத்திற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வு,, “ இது மிகவும் தீவிர பிரச்னை, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவே அதிகாரி அங்கு சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தை மேற்கொள் காட்டி பேசிய நீதிபதி, இது போன்று கொலை செய்வீர்கள் என்றால், நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க போவது இல்லை” என்றார். இடிக்கும் பணிகளை மேற்கொள்ள செல்லும்போது சுமார் 160 காவலர்கள் பாதுகாப்புக்காக சென்றுள்ளார். இச்சம்பவத்தின் போது அவர்கள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அப்போது காவல்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.