ரவுடிகளை நடுங்கவைத்த ‘பாம்பே பாய்’ தெரியுமா? : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
மகாராஷ்டிர முன்னாள் கூடுதல் காவல் ஆணையர் ஹிமான்ஷு ராய் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பையில் ஏடிஜிபி ராய் என்றாலே பல ரவுடிகளுக்கு தொடை நடுங்க ஆரம்பித்துவிடும். ராய்க்கு ‘பாம்பே பாய்’ என்ற இன்னொரு பேர் இருக்கு. இவர் மும்பையில் அட்டூழியம் செய்த பல ரவுடிகளை அடங்கச் செய்தவர். முடிக்க முடியாத பல சிக்கலான வழக்குகள் இறுதியாக ராயிடம்தான் வரும். அப்படி வந்தால் அந்த வழக்குகள் முடியப்போகிறது என்று அர்த்தமாம். ராய் அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட முடியாது எனக்கூறுகின்றனர் அவருடன் பணிபுரிந்த சக அதிகாரிகள்.
ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டம் நடைபெற்றதை அதிரடியாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் ராய். இவர் பல பெரிய இடங்களுக்கு வளைந்துகொடுக்காமல் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் சென்னை அணியின் மேலாண்மை இயக்குநரானருடைய மருமகன் குருநாதனை கைது செய்தவர். மும்பையில் பரபரப்பாக நடத்தப்பட்ட கொலை வழக்குகள் பெரும்பாலும் இவர் விசாரித்ததுதான். ஆனால் பெரிய இடங்களின் பகையால் ஒரு கட்டத்தில் இவர், சாதாரண துறைக்கு மாற்றி ஒரு மூலை உட்கார வைக்கப்பட்டார் என சில மும்பை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கேன்சர் வியாதியால் ராய் கடும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். இந்நிலையில் தான் இன்று தனது துப்பாக்கியால் சுட்டு ராய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அத்துடன் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில் கேன்சரின் கொடுமை தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இவரைப் பற்றி மகாராஷ்டிராவின் முன்னாள் டிஜிபி பஸ்ரிஜா கூறும் போது, ‘ராய் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்பமுடியவில்லை. அவர் ஒரு தைரியமான, வலிமையான காவல் அதிகாரி. நான் சில மாதங்களுக்கு முன்னர் அவருடன் பேசினேன். ஆனால் அப்போதே அவர் உடல்நிலை சரியில்லை என என்னிடம் கூறியிருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
ராய் காலகட்டத்தில் அவரது பல வழக்குகளை சந்தித்த வழக்கறிஞர் உஜ்வல் நிகாம் கூறும் போது, ‘ராய் தற்கொலை செய்துகொண்டார் என்பதை நம்புவதற்கு கடினமாக உள்ளது. அவரிடம் நான் 2 மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தேன். அவர் உடல்நிலை மலிவுற்று இருந்தார் என்பது எனக்கு தெரியாது. ஏனெனில் அவர் எப்போது வலிமையாக இருப்பார்.’ என்று தெரிவித்தார்.