கர்நாடகா| பைக் டாக்ஸிக்கான தடை ரத்து.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கர்நாடகா உயர்நீதிமன்றம் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை நீதிமன்றம் அனுமதித்தது. பைக் உரிமையாளர்கள் போக்குவரத்து வாகனங்களாக பைக்குகளை பயன்படுத்த விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அரசாங்கம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் சாலைகள் விரிவாக்கம், இட நெருக்கடி, வாகனங்கள் பெருக்கம் உள்ளிட்டவற்றால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மறுபுறம் இதைச் சமாளிக்க மக்கள் பொதுப் போக்குவரத்தைத் தவிர்த்து கட்டண நிர்ணயிக்கப்பட்ட தனியார் சேவைகளின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்கின்றனர். இதனால், இவைகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தச் சேவை அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் இருந்தது. அங்கும் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் 'பைக் டாக்சி' சேவைகளை வழங்கி வந்தன.
இந்த நிலையில், கடந்தாண்டு பைக் டாக்ஸியில் பயணித்த ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக எழுந்த புகாருக்கு பிறகு, Ola, Uber, Rapido போன்ற செயலி அடிப்படையிலான பைக் டாக்ஸி சேவைகளுக்கு ஒழுங்குமுறை விதிகள் இல்லாததால் தவறான விசயங்களுக்கு பைக்கை பயன்படுத்துதல், பாலியல் அச்சுறுத்தல் போன்றவற்றால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்படும் வரை பைக் டாக்ஸியை ஓட்டக்கூடாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூன் மாதம் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்தசூழலில் தற்போது ஓலா, உபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை நீதிமன்றம் அனுமதித்தது. அந்த விசாரணையில் பைக் உரிமையாளர்கள் அல்லது பிறரின் பைக்குகளை பயன்படுத்துபவர்கள் தங்கள் பைக்குகளை போக்குவரத்து வாகனங்களாகப் பயன்படுத்த அனுமதிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சட்டத்தின்படி அரசாங்கம் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. முறையான விதிமுறையை வகுத்து பைக் டாக்ஸி சேவையை அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

