’குண்டர் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதா..?’ உ.பி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!
குண்டர் சட்டம் பொது அமைதிக்காக மட்டுமே மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச அரசு, குண்டர் சட்டத்தை துன்புறுத்தும் ஆயுதமாக பயன்படுத்த முனைவதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. இச்சட்டம் மிகுந்த எச்சரிக்கையுடன் பொது அமைதிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி அமர்வு வலியுறுத்தியுள்ளது.
குண்டர் சட்டம் ஏவப்பட்டு ஆறு மாதங்களாக நாடு கடத்தப்பட்ட ஜாகித் அலி என்பவருக்கு எதிரான உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், அவர் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட வழக்குகளையும், ஆறு ஆண்டுகள் இடைவெளியில் உள்ள ஒற்றை வழக்கையும் ஆதாரமாக காட்டியதை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், போலீஸார் தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

