ஹரித்துவருக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளானதில், விமான பொறியாளர் ஒருவர் ஹெலிகாப்டர் ரெக்கையில் சிக்கி பலியானார்.
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் யாத்ரிகர்களின் வசதிக்காக விமானத்துறை சார்பாக ஹெலிகாப்டர் சேவை இயங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று யாத்ரிகர்கள் 5 பேரை அழைத்துக்கொண்டு கோவிந்த்காட் பகுதியிலிருந்து ஹரிதுவார் நோக்கி புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று கிளம்பிய சில நொடிகளிலே நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தின் போது உயிரை காப்பாற்றிக்கொள்ள கீழே குதிக்க முயன்ற விமான பொறியாளர் ஹெலிகாப்டரின் ரெக்கையில் விழுந்து உயிரிழந்தார். இந்த விபத்தில் விமானிகள் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்த நிலையில், பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக விமானத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் பலியானவர்களுக்கு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.