சபரிமலையில் திடீரென பெய்த கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனிடையே பதற்றம் காரணமாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது.
மாத பூஜைக்காக நடை திறந்ததை அடுத்து, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். மரபுகளை மீறி இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது என ஒருபுறம் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் பக்தர்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென பெய்த கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சேறும், சகதியுமாக தண்ணீர் ஓடியதால், பக்தர்கள் புனித நீராட முடியாமல் தவித்தனர். மேலும் நீலிமலை, அப்பாச்சி மேடு மற்றும் சன்னிதானத்திலும் சில மணி நேரங்கள் வரை கொட்டித் தீர்த்த மழையால், பக்தர்கள் மலையேறவும், இறங்கவும் முடியாமல் சிரமத்துக்கு ஆளாகினர்.
எனினும் ஒரு சிலர் மழையை பொருட்படுத்தாமல் கோஷம் எழுப்பியபடி சுவாமி தரிசனத்துக்காக மலையேறிச் சென்றனர். இதனிடையே பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு நீடிக்கிறது.
அதே நேரத்தில் சபரிமலை பகுதியில் அமைதி நிலவுவதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கேரள மாநிலம் பத்தினம்திட்ட மாவட்ட ஆட்சியர் நூஹ் தெரிவித்துள்ளார்.