தனியார் மருத்துவமனைகளின் 80% ஐசியூ படுக்கைகளை கொரோனா பாதித்தவர்களுக்கு ஒதுக்கும் டெல்லி அரசின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கோவிட்-19 நோயாளிகளுக்கு 80% ஐசியூ படுக்கைகளை ஒதுக்க 33 தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி மாநில அரசு செப்டம்பர் 13 ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு தன்னிச்சையானது, நியாயமற்றது மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று தெரிவித்து இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு சுகாதார வழங்குநர்கள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு நீதிமன்றம் டெல்லி அரசு மற்றும் மத்திய அரசிடம் பதில் கோரியது. விசாரணைகளுக்கு பின்னர் தற்போது இந்த டெல்லி அரசின் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.