ரயில்களில் தரமான உணவு தரப்படுகிறதா?: உயர் நீதிமன்றம் கேள்வி
ரயில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து விளக்கம் அளிக்க கோரி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நரிந்தர் கன்னா என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் உணவுகள் தரமற்றதாக உள்ளதாக கடந்த ஜூலையில் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிஏஜி வெளியிட்ட அறிக்கையில், ரயில்வேயால் வழங்கப்படும் உணவு, மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் இருக்கும் குடிநீர் குழாய்கள் சுத்தமாக இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நரிந்தர் கன்னா பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உணவு மற்றும் குடிநீரின் தரத்தை கண்காணிக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

