பேருந்து நடந்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்குவதில்லை..?: டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லியில் இயக்கப்படும் பேருந்துகளில் நடத்துநர்கள் ஏன் எழுந்து சென்று பயணிகளிடம் டிக்கெட் வழங்குவதில்லை என டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், “டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் நடத்துநர்கள் எழுந்து சென்று பயணிகளிடம் டிக்கெட் வழங்குவதில்லை என்றும் அதற்குபதிலாக இருந்து இடத்திலேயே அவர்கள் இருந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தையுடன் செல்லும் பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் நடத்துநர் அருகே சென்று டிக்கெட் வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் விகே ராவ் ஆகியார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேருந்துகளில் நடத்துநர்கள் ஏன் பயணிகளிடம் சென்று டிக்கெட் வழங்காமல், பயணிகளை நடத்துநர் இருக்கும் இடத்திற்கு வர கட்டாயப்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பினர். அத்துடன் இதுதொடர்பாக டெல்லி அரசும், டெல்லி போக்குவரத்து கழகமும் பதிலளிக்க நீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.