பிரியங்கா காந்தியின் உடையை பிடித்து தள்ளிய விவகாரம்: மன்னிப்பு கேட்ட உபி போலீஸ்.
ஹத்ராஸில் காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் உடையை பிடித்து இழுத்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக உத்தரப்பிரதேச போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் நொய்டா போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தினரை சந்திக்க ராகுல்காந்தியும் பிரியங்காவும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அங்கு சென்றனர். அப்போது நொய்டா பகுதியில் பிரியங்கா காந்தியின் உடையை காவலர் ஒருவர் முரட்டுத்தனமாக பிடித்து இழுத்தது பெரும் சர்ச்சையானது.
காவலர் ஒருவர் பிரியங்கா காந்தியின் குர்தாவை பிடித்து இழுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் உருவாக்கியது. இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்நிகழ்வுக்கு காவல் துறை மன்னிப்பு கேட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மூத்த காவல் துறை பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா காந்தியிடம் காவல்துறை முரட்டுத்தனமாக நடந்துகொண்ட படங்கள் வெளியான பிறகு, சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் உருவாகியுள்ளது. இந்த சலசலப்பைக் கருத்தில் கொண்டு, உ.பி.யின் நொய்டா காவல்துறை தற்போது மன்னிப்பு கோரியுள்ளது. நொய்டா காவல்துறையின் ட்வீட்டில் “மிகப் பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போது நடந்த இந்த சம்பவத்திற்கு நொய்டா காவல்துறை வருந்துகிறது. பிரியங்கா காந்தியிடமும் மன்னிப்பு கேட்கிறோம். இந்த விவகாரம் தலைமையகத்தின் துணை போலீஸ் கமிஷனரால் அறியப்பட்டு, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இதுபற்றி விசாரித்து வருகிறார். விசாரணைக்குப் பிறகு தண்டனை நடவடிக்கை உறுதி செய்யப்படும். பெண்களின் முழு மரியாதைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் ” என்று தெரிவித்துள்ளது