ஹரியானா | நாற்காலியில் உட்கார்ந்திருந்த டெலிவரி ஊழியர்.. சரிந்து விழுந்து உயிரிழப்பு
நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் டெலிவரி ஊழியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவின் ஃபரிதாபாத்தின் சத்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் விகல் சிங் (30). இவர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், இவர், கடந்த ஜூலை 29 அன்று அவரது கிராமத்தில் அமைந்துள்ள நிறுவனத்தின் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்து தனது சக ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். விகல் சிங்குடன் இருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக அவரைத் தூக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு சென்றதும், மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.