\
இந்தியாவின் முதல் 'சோலோகாமி' திருமணம்.. தன்னைத்தானே மணமுடித்த குஜராத் இளம்பெண்!

இந்தியாவின் முதல் 'சோலோகாமி' திருமணம்.. தன்னைத்தானே மணமுடித்த குஜராத் இளம்பெண்!

இந்தியாவின் முதல் 'சோலோகாமி' திருமணம்.. தன்னைத்தானே மணமுடித்த குஜராத் இளம்பெண்!
Published on

ஜூன் 11ம் தேதி தன்னைத் தானே திருமணம் செய்துக்கொள்ளவிருந்த இளம்பெண் முன்கூட்டியே சோலோகாமி முறையில் மணமுடித்துக் கொண்டிருக்கிறார்.

குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த கஷமா பிந்து (24) என்ற இளம்பெண் எதிர்பாலினத்தின் மீது பற்றற்று போனதால் தன்மீதான சுய காதல் மற்றும் சுய அங்கீகாரத்தை வெளிப்படுத்த பெற்றோர் சம்மதத்துடன் தன்னைத் தானே ஜூன் 11ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்தியாவில் இந்த முறை சோலோகாமி திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் கஷாமா பிந்துவின் இந்த பின்வாங்காத முடிவு நாட்டிற்கு முன்மாதிரியாக இருக்கிறார் என பல தரப்பிலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஏனெனில் இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் இந்த முறை திருமணம் வழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிந்து தனது திருமணத்தை ஹசாரியில் உள்ள ஹரிஹரேஷ்வர் மகாதேவ் கோவிலில் விமரிசையாக நடத்தவும், அதன் பிறகு தேனிலவுக்கு கோவாவிற்கு செல்லவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பிந்துவின் அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானதை அடுத்து பாஜகவைச் சேர்ந்த வதோதரா நகர துணைத்தலைவர் சுனிதா சுக்லா சோலோகாமி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது இந்து மதத்திற்கு எதிரானது, இந்த முடிவால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும் எனக் கூறி கோவிலில் இந்த முறை திருமணத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் சொல்லியிருந்தார்.

இதனால் பரபரப்பை தவிர்க்கும் வகையில் ஜூன் 11ம் தேதி தன்னைத்தானே திருமணம் செய்துக்கொள்ள இருந்த கஷாமா பிந்து, மெஹந்தி, ஹல்தி போன்ற திருமணத்திற்கான அனைத்து சடங்குகளையும் செய்துக்கொண்டு சோலோகாமி முறையில் தன்னை மணமுடித்திருக்கிறார்.

அதன் பின்னர் வீடியோ வெளியிட்ட பிந்து, “எனக்கு வாழ்த்து தெரிவித்த, என்னுடைய நம்பிக்கைக்காக போராடும் சக்தியை கொடுக்கும் அனைவருக்கும் நன்றிகள்” எனக் கூறியுள்ளார்.

ALSO READ: 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com