குஜராத்: மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி

குஜராத்: மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி
குஜராத்: மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் காரிலேயே உயிரிழந்த கொரோனா நோயாளி

குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேன்சர் நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சேரும் பொருட்டு, காரில் காத்திருந்த போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் இடமில்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவமனைகளுக்கு வெளியே காத்திருக்கின்றனர். உயிரிழப்பு அதிகளவில் இருக்கும் நிலையில், உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்சில் உடல்களை வைத்துக் கொண்டு அடக்கம் செய்வதற்கு காத்திருக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பனஸ்காந்தா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட புற்று நோயாளி ஒருவரை அனுமதிப்பதற்காக காரில் வந்துள்ளனர். அப்போது மருத்துவமனையில் இடமில்லை எனக்கூறியதால் நோயாளியின் மகன் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில், காரில் படுத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்ட அவரது மகன் கதறி அழுத காட்சி காண்போரை உலுக்கியது.

இதே மருத்துவமனையில், வேறொரு கொரோனா நோயாளி ஒருவர் பல மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இலவசமாக படுக்கை வசதியும், வென்டிலேட்டர் வசதியும் கொடுக்க முடியாது என அங்கிருந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநில மருத்துவமனை ஒன்றில் அமைச்சரின் வருகைக்காக எல்லோரும் காத்திருக்க, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாததால் ஆம்புலன்சில் இருந்த கொரோனா நோயாளி உயிரிழந்ததும் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குஜராத், பீகார், மகராஷ்ட்ரா உள்ளிட்ட பகுதிகளில், மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை நீடித்து வருவதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தங்களுக்கு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யும்படி ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலை தளங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com