ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது POCSO கீழ் வராது: மும்பை உயர் நீதிமன்றம்

ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது POCSO கீழ் வராது: மும்பை உயர் நீதிமன்றம்
ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது POCSO கீழ் வராது: மும்பை உயர் நீதிமன்றம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு ஒன்றில், போக்சோ சட்டத்தின் தன்மை குறித்து மும்பை உயர் நீதிமன்றம் வெளியிட்ட கருத்து தற்போது பெரும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமே 'போக்சோ' (POCSO - Protection of Children from Sexual Offences Act) சட்டம் ஆகும். குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை மீட்க 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்படுபவருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடித்து குற்றம்செய்தவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இந்த போக்சோ சட்டம் தொடர்பாக வித்தியாசமான கருத்து ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச் கூறியிருப்பது சட்ட ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

சமீபத்தில் 39 வயதான ஒரு நபர் ஒருவர், 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வழக்கை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா விசாரித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ``பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை ஆடை இல்லாத நிலையில், உடலோடு உடல் தொடுவது போல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நோக்கத்துடன் ஒருவரை அவர் அணிந்த ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை கிடையாது. அது துன்புறுத்தல் மட்டுமே.

எனவே, குற்றம்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆடையை அகற்றாமல், தொந்தரவு செய்தால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது. எனவே, அவரை விடுதலை செய்கிறேன். போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ், பாலியல் ரீதியிலான நோக்கத்துடன் குழந்தைகளின் தனிப்பட்ட உறுப்புகளை தொடுதல், தாக்குதல் நடத்தல் அல்லது குற்றம்சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட உறுப்புகளை தொட வைப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது பாலியல் வன்கொடுமை ஆகும்.

ஒருவரை அவரின் விருப்பம் இல்லாமல் பாலியல் நோக்கத்துடன் அத்துமீறி தொடுவதை ஆங்கிலத்தில் Groping என்பார்கள். இந்த செயல் பாலியல் குற்றமல்ல" என்று தீர்ப்பளித்து குற்றவாளியை விடுதலை செய்துள்ளார் அந்த நீதிபதி. நீதிபதியின் இந்த தீர்ப்பு தற்போது விவாதமாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com