கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவருக்கும், உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் பெண்ணுக்கும் இடையே வீடியோ கால் மூலம் திருமணம் நடைபெற்றது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் மணப் பெண்ணுக்கு செல்போனில் தாலி கட்டியுள்ளார் அந்த இளைஞர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1074 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் திருமண நிகழ்வுகள் தடைப்பட்டுள்ளன. சில இடங்களில் குறைந்த அளவிலான உறவினர்களுடன் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநிலங்கள் இடையிலான எல்லைகள் மூடப்பட்டுள்ள, காரணத்தால் வேறு மாநிலங்களுக்கு திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை அடுத்துள்ள கங்கனசேரியை சேர்ந்த வங்கி ஊழியரான ஸ்ரீஜித் நடேசன் என்பவருக்கும், ஐடி பணியாற்றி வரும் அஞ்சனா என்ற பெண்ணிற்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டது. அப்போது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது .
ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரியும் மணப்பெண்ணால் கேரளாவிற்கு வர முடியவில்லை. இதனால் இவர்களது திருமணத்தை வீடியோ கால் மூலம் நடத்த உறவினர்கள் திட்டமிட்டனர். இதனையடுத்து கேரளாவில் இருந்து மணமகன் செல்போனில் வீடியோ காலில் தெரிந்த மணமகள் அஞ்சனாவிற்கு தாலி கட்டினார்.
அப்போது இவர் கட்டுகையில் மறுபக்கம் இருந்த மணமகள் அஞ்சனா தானே தனது கழுத்தில் தாலி கட்டிக்கொண்டார். இதேபோல பல திருமணச் சம்பவங்கள் வைரலாகி வருகிறது. ஆனால் மணமகன் செல்போனில் தாலி கட்டுவதெல்லாம் "ரொம்ப ஓவர்" என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.