"நாகினி" டான்ஸ் ஆடிய மணமகன் - கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்
உத்தரப்பிரதேசத்தில் திருமண வைபோகத்தில் குடித்து விட்டு "நாகினி" டான்ஸ் ஆடிய மணமகனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஜஹான்பூர் பகுதியில் நடைபெற்ற திருமண வைபோகத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மணமகன் அழைப்பின் போது நண்பர்களுடன் குடித்து விட்டு ஆட்டம் போட்ட அவர், அனைவரின் முன்னிலையில் பாம்பை போல கீழே புரண்டு, உருண்டு நடனமாடியுள்ளார். வடமாநிலங்களில் பிரபலமான இந்த நாகினி நடனத்தை ஏராளமானோர் முன்னிலையில் மணமகன் ஆடிய நிலையில், அவரது நண்பர்கள் அவர் மீது பணத்தை வாரி இரைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் வீட்டார் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். மணமகனின் இந்த செயலை கண்டு அதிர்ந்துப்போன மணப்பெண் திருமணத்தை உடனடியாக தடுத்து நிறுத்தினார். திருமணம் நிறுத்தப்பட்டது கூட தெரியாமல் மணமகன் நண்பர்களுடன் நாகினி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.