“ எனது நண்பர் அனந்த் குமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன்”- பிரதமர் மோடி இரங்கல்
மத்திய அமைச்சர் அனந்த் குமார் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் அனந்த் குமார் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நியூயார்க் மற்றும் லண்டன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு அவர் மரணமடைந்தார்.
இந்நிலையில் அனந்த் குமார் மறைவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனந்த் குமார் மறைவு தமக்கு வருத்தமளிக்கிறது என்றும் அவரின் மறைவு கர்நாடக மக்களுக்கு பேரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனது நண்பர் அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாஜகவின் மிகப்பெரிய சொத்தாக இருந்த அனந்தகுமார், கர்நாடகாவில் கட்சியை வலுப்படுத்த பாடுபட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு வளர்ச்சியை தனது உயிர் மூச்சாக கொண்டு பணியாற்றியவர் அனந்த் குமார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். இதேபோன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சதானந்தா கவுடா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.