”சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரித்திடுக” - எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.!
மேற்காசியாவில் போர் விரிவடைந்து வரும் சூழலில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர கால உத்தரவை பிறப்பித்துள்ளது. 2024 -25 ஆம் ஆண்டில் இந்தியாவில் சமையல் எரிவாயுவான எல்பிஜியின் நுகர்வு, 3 கோடியே 13 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இதில், 1 கோடியே 28 லட்சம் டன் எல்பிஜி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய தேவையில் 90 சதவீதம் வரை, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய விநியோகஸ்தரான கத்தார், திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியையே நிறுத்தியுள்ளது. எனவே, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அவசர கால உத்தரவில், சமையல் எரிவாயு தயாரிக்க பயன்படும் ரசாயனங்களை வேறு பயன்பாட்டுக்கு மடைமாற்றம் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

