எஸ்சி எஸ்டி சட்டத்தில் உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகளை நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அந்த கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.பின்னர் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையின கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான சட்ட மசோதாவை வரும் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அரசியலமைப்பின் 9ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுடியாது. எஸ்சி எஸ்டி சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கும் வகையிலான ஷரத்துகள் அவசரச் சட்டத்தில் இடம்பெறும் என தெரிகிறது. அவசரச் சட்டம் உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான உடனடி நடவடிக்கை என்றும் அதை சட்டமாக்கி அரசியலமைப்பின் 9ஆவது அட்டவணையில் இணைப்பது நிரந்தர தீர்வாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.