\
No WhatsApp without active SIM Centre issues new rules
WhatsAppFile Photo

வாட்ஸ்அப் பயனர் பெயர் அறிமுகம்.. மெட்டா நிறுவனத்திற்கு திடீர் உத்தரவிட்ட மத்திய அரசு!

இதுவரை புதிய நபர்களுடன் வாட்ஸ்அப்பில் பேச வேண்டும் என்றால், அதற்கான கைப்பேசி எண்ணைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அதற்குப் பதிலாக பயனர் பெயரை மட்டும் பகிர்ந்தால் போதுமானது.
Published on

வாட்ஸ்அப், அதன் பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், கைப்பேசி எண்களைப் பகிராமல் தனித்துவமான பயனர் பெயர்கள் மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அதை இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), அதன் பயனர்களின் தனியுரிமையை (Privacy) மேலும் பலப்படுத்தும் நோக்கில், கைப்பேசி எண்களைப் பகிராமல் தனித்துவமான பயனர் பெயர்கள் மூலம் மற்றவர்களுடன் இணைவதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. அதாவது, இதுவரை புதிய நபர்களுடன் வாட்ஸ்அப்பில் பேச வேண்டும் என்றால், அதற்கான கைப்பேசி எண்ணைக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இனி அதற்குப் பதிலாக பயனர் பெயரை மட்டும் பகிர்ந்தால் போதுமானது. இதன்மூலம், பயனர் பெயரைப் பயன்படுத்தி யாராவது செய்தி அனுப்பும்போது, அவர்களுக்கு பயனரின் கைப்பேசி எண் காட்டப்படாது.

Whatsapp
WhatsappPT

மேலும், இந்த அம்சத்திற்கான பயனர் பெயர்களை முன்பதிவு செய்யும் (Reserve) வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கியது. இதற்காக, பயனரின் பெயர் 3 முதல் 35 எழுத்துகள் வரை இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இதன் கூடுதல் பாதுகாப்பிற்காக 'யூசர்நேம் கீ' என்ற புதிய அம்சத்தையும் வாட்ஸ்அப் வழங்கியது. இதை ஆன் செய்து வைத்தால், பயனர் பெயர் தெரிந்திருந்தாலும், இந்தச் சாவியையும் (Key) உள்ளிட்டால் மட்டுமே புதியவர்களால் பயனர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும்.

ஆனாலும், இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாகப் பயனர் பெயர்களை முன்பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தச் சேவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் என்று வாட்ஸ்அப் தாய் நிறுவனமான மெட்டா (Meta) தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பின் முன்மொழியப்பட்ட பயனர் பெயர் அம்சத்தை, அதன் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தாக்கங்கள் குறித்த கலந்தாலோசனைகள் முடிவடையும்வரை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்று மெட்டா நிறுவனத்திற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

WhatsApp
WhatsApp

தகவல்களின்படி, இந்த அம்சம் எவ்வாறு செயல்படும், பயனர்களைச் சரிபார்க்க என்ன வழிமுறைகள் இருக்கும், மேலும் ஆள்மாறாட்டம், இணையவழி மோசடி மற்றும் பிற முறைகேடுகளைத் தடுக்க நிறுவனம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு மெட்டா நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆய்வு மற்றும் ஆலோசனைகள் நிறைவடையும் வரை இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் அந்நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, மூன்று நாட்களுக்குள் விரிவான விளக்கம் கோரியுள்ளது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், அரசாங்கத்தின் இந்த நோட்டீஸுக்கு மெட்டா நிறுவனம் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com