“ஜிஎஸ்டியை மத்திய அரசு சரியாக நடைமுறைப்படுத்தவில்லை” - சிஏஜி
ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதை அரசு பரிசோதித்து பார்க்க தவறியதால் வரி வருவாய் குறைந்ததாக ஜிஎஸ்டி தொடர்பான அரசுத் தலைமை தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிகள் குறித்து அரசுத் தலைமை தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷியின் முதல் அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரிவிதிப்பின் முக்கிய அம்சமான ரசீது சரிபார்க்கும் முறை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அமல்படுத்தப்படவில்லை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்பான படிவங்கள் தாக்கல் செய்யப்படுவதும் முழுமையாக இல்லை என்றும் மாதந்தோறும் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் மாநில அரசுகளுடன் வருவாய் பகிர்விற்காக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அரசு பின்பற்ற தவறிவிட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 2017-18ஆம் ஆண்டிற்கான ஐ-ஜிஎஸ்டி தொகையின் பகிர்வு நிதி ஆணையத்தின் விதிகளின்படி பகிரப்பட்டுள்ளது. இது ஐ-ஜிஎஸ்டி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறும் விதமாக அமைந்துள்ளது. ஆகவே மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மூலம் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் ஜிஎஸ்டி வரி அறிமுகபடுத்தப்பட்டதற்கு பிறகு மறைமுக வரிகள் வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளதாக தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது. அதாவது 2016-17ஆம் ஆண்டு 21.33% ஆக இருந்த மறைமுக வரிகளின் வளர்ச்சி 2017-18ஆம் ஆண்டு 5.8%ஆக குறைந்துள்ளது. அதேசமயம் இந்தக் காலாண்டில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி மூலம் வரும் வருவாயும் 10% குறைந்தது. இதற்கு மத்திய அரசு ஜிஎஸ்டி முறையை அமல்படுத்துவதற்கு முன்பு சரியாக சோதனை செய்யாததே காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.