\
1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்? 

1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்? 

1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்? 
Published on

குஜராத் முதல் டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதி வரை 1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு மரங்களை வளர்த்து ‘பசுமை பெருஞ்சுவர்’  அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மத்திய அரசு  ‘பசுமைச் சுவர்’ என்ற திட்டத்தை அமைக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்தத் திட்டத்தின் மூலம் குஜராத் மாநிலம் போர்பந்தர் முதல் ஹரியானாவின் பானிபட் வரை 1400 கிலோ மீட்டர் தூரத்திற்கும் 5 கிலோ மீட்டர் அகலத்திற்கும் மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் மூலம் ஆரவல்லி மலை பகுதியில் வெட்டப்பட்ட மரங்களால் ஏற்பட்டுள்ள நில பாதிப்பை சீர்செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல தார் பாலைவனத்தில் ஏற்பட்டுள்ள நில பாதிப்புகளையும் இதன் மூலம் சரி செய்ய முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிகிறது. 

மேலும் இந்தப் பசுமைச் சுவர் மேற்கு பகுதியிலிருந்து வரும் தூசியையும் தடுக்க உதவும் என நம்பப்படுகிறது. அத்துடன் நிலங்கள் பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐநாவின் மாநாட்டில் (United Nations Convention to Combat Desertification) பசுமைச் சுவர் முக்கிய அம்சமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஆலோசித்து வருகிறது. எனினும் இத் திட்டத்திற்கு பல துறைகளின் அனுமதி தேவைப்படும் என்பதால் இதனை அமல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது. 

ஏற்கெனவே ஆப்பிரிக்காவில் ‘கிரேட் கிரீன் வால்’  என்ற திட்டத்தின் மூலம் செனேகல் நாட்டின் டாகர் பகுதியிலிருந்து டிஜிபௌட்டி (Djibouti) வரை பசுமைச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தற்போது வரை 15 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்தத் திட்டத்தில் பல நாடுகளின் ஒப்புதல் தேவைப்படுவதால் இது தாமதாகி உள்ளது. இந்தத் திட்டத்தை ஆப்பிரிக்க கூட்டமைப்பு 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. இதற்கு உலக வங்கி மற்றும் ஐரோப்பிய கமிஷன் ஆகியவை ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com