சரியும் தங்கம் விலை.. ஒரு வாரத்தில் ரூ.6,560 குறைவு.. ஏன் தெரியுமா?
தங்கம் விலை கடந்த ஒரு வாரத்தில் 6,560 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் விலை குறைவதற்கான 3 முக்கிய காரணங்களை தெரிந்துகொள்ளலாம்..
பொதுவாக, போர்ச் சூழலில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை உயர்வதுதான் உலகளாவிய வழக்கம். ஆனால், தற்போது நிலவும் ஈரான் போர்ச் சூழலில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தங்கம் விலை குறைந்ததற்கு மூன்று முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ரஷ்யா உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு கொள்கைகள், வெனிசுலா மீதான படையெடுப்பு, ஈரான் உடனான போர்ச் சூழல் உள்ளிட்டவை தங்கம், வெள்ளி முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்தது.
கடந்த ஜனவரி 29ஆம் தேதி, எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. பொதுவாக, போர்ச் சூழலில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை உயர்வதுதான் உலகளாவிய வழக்கம். ஆனால், தற்போது நிலவும் ஈரான் போர்ச் சூழலில் தங்கம் விலை குறைந்து வருகிறது.
இன்று தங்கம் சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1 லட்சத்து 14 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 270 ரூபாய் குறைந்து 14 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் 6560 ரூபாய் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 265 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைந்ததற்கு மூன்று முக்கியக் காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது, தற்போது வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அமெரிக்காவின் எரிசக்தி முக்கியத்துவம் பெற்று டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தைவிட டாலரை நோக்கி நகர்வதுடன், மற்ற நாடுகளுக்கு தங்கம் வாங்குவது விலை உயர்ந்ததாக மாறியுள்ளது.
இரண்டாவது, அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவிகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், வட்டி வருமானம் தரும் கடன் பத்திரங்கள் கவர்ச்சிகரமான முதலீடாக மாறியுள்ளன. மூன்றாவது காரணம், ஏற்கெனவே தங்கம் உச்சத்தில் இருந்ததால், லாபத்தைப் பதிவுசெய்ய முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பதும் விலை சரிவுக்குக் காரணமாகிறது. எனினும், நிபுணர்கள் இதனை ஒரு‘தற்காலிகத் திருத்தம்’ என்றே கருதுகின்றனர். போர் நீண்டகாலம் நீடித்தால், தங்கம் மீண்டும் விலை உயரக்கூடும் என்கின்றனர்.

