பாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா? - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு

பாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா? - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு
பாரிக்கர் உடல் வைத்த இடம் புனிதப்படுத்தப்பட்டதா? - விசாரணைக்கு கோவா அரசு உத்தரவு

கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த காலா அகடாமியின் இடத்தில் செய்யப்பட்ட சடங்குகள் குறித்து விசாரிக்க கோவா கலைத்துறை அமைச்சர் கோவிந்த் கவுடே உத்தரவிட்டுள்ளார்.

கோவா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்(63) கணையப் புற்றுநோயால் அவதிப்பட்டு கடந்த 17ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து பொதுமக்களின் அஞ்சலிக்காக பாரிக்கரின் உடல் கோவா அரசிற்கு சொந்தமான காலா அகடாமியில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலா அகாடமியில் பாரிக்கரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் புனிதப்படுத்துவதற்கான பூஜை நடைபெற்றதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த தகவல் பெரும் சர்ச்சைகளை கிளப்பின. 

இந்நிலையில் கோவா கலைத்துறை அமைச்சர் கோவிந்த் கவுடே இச் சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், “என்னுடைய துறைக்குள் இயங்கும் அகடாமியில் அறிவியல் சாராத எந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு அளிக்காது. நேற்று காலா அகாடமியில் நடந்த பூஜை குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அரசாங்க கட்டடங்களில் இதுபோன்ற செயல்களை எப்போதுமே அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இந்த விவாகரம் தொடர்பாக காலா அகடாமியின் செயலாளர் குருதாஸ் பிலர்னேகர், “நேற்று நடந்த பூஜையில் ஓம் மந்திரம் மட்டும் தான் உச்சரிக்கப்பட்டது” எனக் கூறியுள்ளார். இருப்பினும் ஓம் மந்திரம் ஏன் உச்சரிக்கப்பட்டது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com