கோவா முதலமைச்சர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் மனோகர் பாரிக்கர். கோவா முதலமைச்சராக பதவியில் உள்ளார். இவருக்கு வயது 62. கடந்த 15ம் தேதி லேசான கணைய அழற்சிக் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 22ம் தேதி வீடு திரும்பினார். அன்றைய தினமே சட்டப்பேரவையில் கோவா பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உடல் வறட்சி காரணமாக மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைக்கு மனோகர் பாரிக்கர் மேல் சிகிச்சைக்காக செல்லவுள்ளதாக தகவல் வெளியாகின. ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மனோகர் பாரிக்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.