கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்
கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (63) கடந்த அக்டோபர் மாதம் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை பெற்ற அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் பானாஜியில் மாண்டோவி நதியின் குறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் மூக்கில் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அவர் ஒருவரின் துணையுடன் குறிப்பிட்ட தூரம் நடந்து சென்றார். பின்னர் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்த வந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை இன்று மோசமடைந்தது. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கோவா விரைந்தனர். இந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்