இந்திய கடலில் கொட்டிக் கிடக்கிறது லட்சக்கணக்கான டன் தாதுப்புதையல்
இந்தியாவை சுற்றி உள்ள கடல் பகுதியில், கடலுக்கடியில் விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் தாதுக்கள் லட்சக்கணக்கான டன் கணக்கில் கொட்டிக் கிடப்பதாக இந்திய புவியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தீபகற்ப இந்தியாவில் கடலுக்கடியில் உள்ள தாதுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) ஆய்வு செய்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது மங்களூர், சென்னை, மன்னார் வளைகுடா, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளை சுற்றி மிகப்பெரிய அளவில் கடல் வளங்கள் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டது. ஆழமான மற்றும் விரிவான ஆய்வு நடத்தினால் கடலுக்கடியில் சுண்ணாம்பு மண், பாஸ்பேட் நிறைந்த மற்றும் சுண்ணாம்பு படிவுகள், ஹைட்ரோகார்பன், உலோக படிவுகள் என மிகப்பெரிய பொக்கிஷம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜிஎஸ்ஐ அதிகாரிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் 181,025 சதுர கி.மீ. பரப்பளவில் 10 ஆயிரம் மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுண்ணாம்பு மண் இருப்பதை கண்டறிந்து அது தொடர்பான தரவுகள் தற்போது வெளியிட்டுள்ளன. கர்வார், மங்களூர் மற்றும் சென்னை கடற்பகுதியில் பாஸ்பேட் படிவுகள், தமிழ்நாடு கரையோரத்தில் மன்னார் பேசின் நீரோட்ட அமைப்பில் எரிவாயு ஹைட்ரேட், அந்தமான் கடலில் பெரோ மாங்கனீஸ், லட்சத்தீவுகளைச் சுற்றி நுண்ணிய மாங்கனீசு படிமங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.