வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி பெறுவதற்கு, கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான சட்டங்களில் புதிய விதிமுறைகளை சேர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வெளிநாட்டு நிதியுதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்டோர் வெளிநாட்டு நிதியுதவியை பெற முடியாது எனவும் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு நிதியுதவிகளை பெற அனுமதி கோரும் அமைப்புகள் 3 ஆண்டுகள் செயல்பட்டதாக இருக்க வேண்டும் எனவும், கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 15 லட்ச ரூபாயை நலத்திட்டங்களுக்காக செலவு செய்திருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. குறிப்பாக, வெளிநாட்டிலிருந்து நிதி வழங்கக் கூடியவர்கள் என்ன காரணத்திற்காக நிதியை வழங்குகிறார்கள் என்பதற்கான கடித்தை சமர்பிக்கவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெறுவதற்காக அனுமதி கோரி விண்ணப்பிக்க கூடிய நிறுவனங்கள், அதற்காக செலுத்த வேண்டிய கட்டணங்களையும் அரசு உயர்த்தியுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளிநாட்டு நிதி உதவிகளை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.