“கடனை விட அதிக சொத்துக்கள் முடக்கப்பட்டதை பிரதமரே கூறியுள்ளார்” - மல்லையா ட்வீட்
தான் கொடுக்க வேண்டிய கடன் அளவைவிட அதிக அளவு சொத்துகளை அரசாங்கம் கையகபடுத்தியுள்ளது என்று பிரதமர் மோடியே தெரிவித்துள்ளதார் என விஜய் மல்லையா கூறியுள்ளார்.
தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான 9000 கோடி ரூபாய் திரும்பி தராமல் இந்தியாவிலிருந்து வெளியறினார். அவர் தற்போது லண்டனில் வசித்துவருகிறார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்தப் பேட்டியில், “இந்திய அரசு கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டிலிருந்து வெளியேறியவர்களின் சொத்துகளை கையகபடுத்தும் சட்டத்தை கொண்டுவந்தது. அதன்மூலம் விஜய் மல்லையா வங்கிகளுக்கு தர வேண்டிய 9000 கோடி ரூபாய் தொகைக்கு மேலான அவரது சொத்துகளை கையகபடுத்தியுள்ளது. அதாவது விஜய் மல்லையாவிற்கு சொந்தமான 14000 கோடி ரூபாய் அளவிலான சொத்துகளை இந்திய அரசு கைப்பற்றியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மோடியின் பேட்டி குறித்து விஜய் மல்லையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “மோடி அவரது பேட்டியின் மூலமாக நான் செலுத்த வேண்டிய கடனுக்கும் அதிகமான சொத்துகளை கைப்பற்றியுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் 1992ஆம் ஆண்டு முதல் நான் லண்டனில் வசித்து வருகிறேன். அத்துடன் மோடியே ஒப்புக் கொண்ட பிறகும் என்னை ஏன் இன்னும் பாஜகவினர் தாக்கி பேசிவருகின்றனர் என்பது புரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

