கட்சிகள் முன்வைக்கும் ‘மாநிலங்களுக்கு சிறப்பு வகை அந்தஸ்து’ - கோரிக்கை! அதன் முக்கியவத்துவம் என்ன?

பாஜக தலைமைக்கு தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் முன்வைக்கும் ஒரு முக்கிய கோரிக்கை, சிறப்பு வகை அந்தஸ்து. அப்படி என்றால் என்ன? ஒரு மாநிலத்திற்கு இந்த அந்தஸ்து எப்படி வழங்கப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.
சிறப்பு வகை அந்தஸ்து
சிறப்பு வகை அந்தஸ்துமுகநூல்

செய்தியாளர் : ஜி.எஸ்.பாலமுருகன்

சிறப்பு வகை அந்தஸ்து என்றால் என்ன?

நாட்டில் வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் மாநிலங்களை மேம்படுத்தவே சிறப்பு வகை அந்தஸ்து வழங்கப்படுகிறது. புவியியல் மற்றும் சமூக - பொருளாதார ரீதியிலான பிரச்னைகளுக்கு ஏற்ப அந்தஸ்து வழங்கப்படுகிறது. ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சிறப்பு அந்தஸ்து வழங்க அரசியலமைப்பில் எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும், 1969ல் ஐந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு வகை அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் எவை எவை?

அப்படியாக, ஜம்மு- காஷ்மீர், அசாம் மற்றும் நாகாலாந்து ஆகியவை 1969ல் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட முதல் மாநிலங்களாகும். பின்னர் இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், உத்தரகாண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பு வகை அந்தஸ்து - எப்போது வழங்கப்படும்?

மலைப்பாங்கான நிலப்பரப்பு, குறைந்த மக்கள்தொகை அடர்த்தி மற்றும் பழங்குடியினரின் கணிசமான பங்கு, அண்டை நாடுகளுடன் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளில் இருப்பது, பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பில் பின்தங்கியிருப்பது, மாநில நிதிகளின் சாத்தியமற்ற தன்மை போன்ற காரணிகளின் அடிப்படையிலேயே ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து வழங்கப்படும்.

சிறப்பு வகை அந்தஸ்து - கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?

2014ல் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மாநிலம் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றது.

சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலத்திற்கு, பொருளாதாரம் மற்றும் நிதி அம்சங்களில் மட்டுமே சலுகைகள் அளிக்கப்படுகிறது.

சட்டப்பேரவை மற்றும் அரசியல் உரிமைகளில் எந்த சலுகைகளும் கிடையாது.
சிறப்பு வகை அந்தஸ்து
மோடி பதவியேற்பு விழா: யார் யாருக்கெல்லாம் அழைப்பு தெரியுமா?

சலுகைகள்...

ஒரு மாநிலம் சிறப்பு அந்தஸ்து பெற்றால், மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்த 90 சதவிகித நிதி கிடைக்கும். மீதமுள்ள நிதி மாநிலத்தின் பங்காகும். இதுவே மற்ற மாநிலங்களுக்கு 60 சதவிகிதம் அல்லது 75 சதவிகிதம் நிதிதான் மத்திய அரசால் வழங்கப்படும்.

ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் செலவு செய்யப்படாவிட்டால் அவற்றை அடுத்தடுத்த ஆண்டுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். சுங்க வரி, வருமான வரி மற்றும் கார்ப்பரேட் வரி உள்ளிட்டவற்றில் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெற முடியும்.

மத்திய அரசின் மொத்த பட்ஜெட்டில் 30 சதவிகிதம் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்களுக்கு செல்கிறது. இதனால், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, வரிப் பகிர்வு மூலம் அத்தகைய மாநிலங்களில் வளர்ச்சி இடைவெளியை 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக உயர்த்த 14வது நிதிக்குழு பரிந்துரை செய்திருந்தது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பாஜக தலைமையிடம் சிறப்பு வகை அந்தஸ்து கோரிக்கையை முன்வைக்கின்றன.
சிறப்பு வகை அந்தஸ்து
சபாநாயகர் பதவி கோரும் கூட்டணி கட்சிகள்... நெருக்கடியில் பாஜக! விட்டுகொடுக்குமா? விட்டுப்பிடிக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com