CAA முதல் நீட் தேர்வு முறைகேடு வரை.. 3 முறை மட்டுமே பின்வாங்கியிருக்கும் மோடி அரசு.!
மூன்றாவது முறை ஆட்சியில் இருக்கும் மோடி அரசு, இதுவரை மூன்று முக்கிய தருணங்களில் மட்டுமே பின்வாங்கியதாக இந்த செய்தி விளக்குகிறது. குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தால் நாடு தழுவிய குடிமக்கள் பதிவேடு திட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. இப்போது நீட் முறைகேடு, மாணவர் போராட்ட அழுத்தத்தால் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதும் அரசின் பின்வாங்கலாக பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவை ஆண்டுக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இதுவரை மூன்று முறை மட்டுமே பின் வாங்கியுள்ளது.
முதலாவது பின்வாங்கல், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்தது. நாடு தழுவிய தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, மத்தியஅமைச்சர் அமித் ஷா தொடர்ந்து பேசிவந்தார். ஆனால் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், நாடு தழுவிய குடிமக்கள் பதிவேடு குறித்து அரசு எந்தமுடிவும் எடுக்கவில்லை என, பிரதமரே தெரிவித்தார்.
இரண்டாவது முறை, விவசாயிகளின் போராட்டத்தால் பாஜக அரசு பின் வாங்கியது. டெல்லி மற்றும் அதன் எல்லைகளில் நடைபெற்ற போராட்டத்தால், 3 வேளாண்சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது.
இந்தசூழலில் தற்போது மத்திய கல்விஅமைச்சர் பொறுப்பிலிருந்து தர்மேந்திர பிரதான் விலகியிருப்பது பாஜக அரசு பின்வாங்கியதன் மூன்றாவது முறை. மாணாக்கர் போராட்டத்துக்கு பாஜக அரசு பணிந்ததற்கு, அதன் ஆதரவு வட்டத்திலேயே போராட்டத்துக்கு ஆதரவு பெருகியதே காரணம் என கூறப்படுகிறது. நடுத்தர, ஏழை வர்க்கத்தை சேர்ந்த மாணாக்கரும்-இளைஞர்களும், பாஜகவின் ஆதரவு தளத்துக்குள்ளோ அதன் அருகிலோ இருப்பவர்கள் எனவும், அவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக திரள தொடங்குவது அரசியல் ஆபத்து என்பதால், தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

